சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் 86 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவர அறிக்கைகளை டிஜிட்டல் முறையில் விரைவாகப் புதுப்பித்து வெளியிடுவது என்பது, கடந்த ஓராண்டில் ஆணையம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும். இசிஐநெட் (ECINET) செயலி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த தரவுகளை கள அலுவலர்கள் கையால் பூர்த்தி செய்து வந்ததால், இந்த செயல்முறைக்கு பல வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆனது.
தற்போது வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் வேட்பாளர்கள், வாக்காளர்கள், பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள், கட்சி வாரியாக மற்றும் வேட்பாளர் வாரியாக பதிவான வாக்குகள் என 14 வகையான தரவுகள் உள்ளன. இதை இசிஐநெட் செயலி மற்றும் இணையதளம் (https://www.eci.gov.in/statistical-reports) மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் புள்ளிவிவர அறிக்கைகள் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 5,74,11,793 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,93,89,958 பேர் வாக்களித்துள்ளனர். இதில், தபால் மூலம் மட்டும் 5,86,954 பேர் வாக்களித்த நிலையில், அவற்றில் 65,047 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் 4023 வேட்பாளர்களில் 3352 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். நோட்டாவுக்கு 1,99,805 பேர் வாக்களித்துள்ளனர். செல்லத்தக்கதாக 4.91 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. வெளிநாடுகளில் 2,730 வாக்காளர்கள் உள்ள நிலையில், 16 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 86.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.