தமிழகம்

“அண்ணா அறிவாலயத்தில் இருந்து வருபவர்கள் யாரையும் தரக்குறைவாக பேச மாட்டார்கள்” - திருச்சி சிவா

என்.சன்னாசி

மதுரை: “அண்ணா அறிவாலயத்தில் இருந்து வருபவர்கள் யாரையும் தரக்குறைவாக பேசமாட்டார்கள்” என திமுக எம்.பி. திருச்சி சிவா பிரச்சாரம் செய்தார்.

மதுரை சிந்தாமணியில் திமுக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “தமிழகத்தில் கல்வி வளர்ச்சியும், பொருளாதாரமும், பெண்களின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது. மேலும் இங்கு மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால், இந்திய அளவில் 143 கோடி மக்கள் உள்ளனர். எதிர்காலத்தில் மக்கள் வாழ இடமே இல்லாமல் போகும் என்ற அச்சத்தில் உள்ளோம். இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் உள்ளதால் அங்கு அதிக எண்ணிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழகத்தில் குறைவாக இருப்பதால் குறைவான உறுப்பினர்களும் கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தினர்.

2021-ல் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைய நீங்கள் உதவி செய்தீர்கள். மீண்டும் உங்களைத் தேடி வந்துள்ளோம். 50 ஆண்டுகளாக ஸ்டாலினுடன் பயணிப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது.

எல்லா கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் வாக்கு கேட்க உரிமை உண்டு. உங்கள் ஆதரவு இன்றி யாரும் ஆட்சியில் அமர முடியாது. ஏழை - பணக்காரர், படித்தவர் - படிக்காதவர் என யாராக இருந்தாலும் அரசியல் ரீதியாக வாக்களிக்க வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் இருந்து வருபவர்கள் யாரையும் தரக்குறைவாக பேச மாட்டார்கள். வாக்குச் சாவடியில் நீங்கள் போய் நிற்கும் ஒரு நிமிடம் தான் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.” என்றார்.

SCROLL FOR NEXT