சென்னை: திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் அலெக்ஸ். இவர் விடுப்பில் சென்றதால் அக்காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் - ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தார்.
இந்தச் சூழலில் திருவொற்றியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரும் (மதியம் 12 மணி), அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் (இரவு 10 மணி) சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலானது. சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் பொறுப்பில் இருந்த பகுதியில் கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
“இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் சிறையில் அடைக்
கப்படுவார்கள்.
சட்டவிரோத மது விற்பனையை தடுக்கத் தவறும் காவல் துறையினர் மீதும் பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.