தமிழகம்

“தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” - திருமாவளவன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: தங்க மோதிரம் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 44 சதவீத குழந்தைப் பிறப்புகள் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன.

தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையில் வசூலிக்கின்றனர்.

சிசேரியன் மூலம் நடக்கும் பிறப்பு எனில் ரூ.2.5 லட்சம் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

வசதிகளை மேம்படுத்தலாம்

இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்டபிரசவ வார்டுகளை உருவாக்கு வதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களை யும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும். எனவே, அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மாண்பை பாதுகாக்க வேண்டும்

மேலும், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது முதல்வர் என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல.

கட்சி மேடைகளில் பேசும் போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதல்வர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT