திருமாவளவன்
சென்னை: “கூட்டணிக்கு போயஸ் தோட்டத்தை தேடிவந்த காலம் மாறி, டெல்லியை தேடிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பாஜக கிள்ளுக்கீரையாக நடத்துகிறதோ என்ற எண்ணம் பொதுவெளியில் இருக்கிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விருப்பமனு விநியோகத்தை விசிக தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “குறைவான தொகுதிகளை பெறும் நிலையில் உள்ளோம். விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என ஓரிரு நாட்களில் தெரியவரும். திமுகவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ, அதேபோல கூட்டணி நலனையும் பார்க்க வேண்டியதாக உள்ளது. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியதாக உள்ளது.
எத்தனை கூட்டணி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாகவே உள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி நலனுக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் போகாது. கட்சி நலன் முக்கியமானது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதை யாரும் பிழையாகப் பார்க்க முடியாது. விரைவில் அவர்கள் முடிவெடுப்பார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
கூட்டணிக்கு போயஸ் தோட்டத்தை தேடி வந்த காலம் மாறி டெல்லி தேடிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதிமுக எனும் மாபெரும் சக்தியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பாஜக அவரை கிள்ளுக்கீரையாக நடத்துகிறதோ என்ற எண்ணம் பொதுவெளியில் இருக்கிறது. இது அவர்களின் கட்சி விவகாரம் அதில் நான் இனி பதில் கூற முடியாது.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.