சென்னை: "5 ஆண்டு காலம் தவெக ஆட்சி செய்தால் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். திமுக ஆட்சியைவிட நீங்கள் குறைவாக கடன் வாங்கினால், நான் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என முன்னாள் நிதியமைச்சரும், திமுக மூத்த தலைவருமான தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தின் நிதித் துறை அமைச்சர் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்றுதான் சொல்ல வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்க தவெக அரசு முயற்சி செய்கிறது.
தமிழகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது புதிதல்ல. அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்றாவது முறையாகும்.
அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், அதற்கு முன்பிருந்த 1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டு கால நிதிநிலை குறித்து விவரிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், 15 ஆண்டு கால நிதிநிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். ஆனால், இவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை வெறும் 5 ஆண்டு காலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
திமுக ஆட்சியை மட்டும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? திமுக ஆட்சிக் காலத்தை மட்டும் மையமாக வைத்து வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? யாரை காப்பாற்றுவதற்காக இந்த வெள்ளை அறிக்கையில் முந்தைய ஆட்சிக் கால விவரங்கள் இடம்பெறவில்லை? தீர்ந்து போனதாக சொல்லப்படுபவர்களை கவருவதற்காகவே இதை செய்கிறார்களா?
ஆழம் தெரியாமல் காலை விட்டு, நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வழங்கி, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டார்கள். தற்போது அந்த தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
திமுக வெள்ளை அறிக்கை வெளியிட்டபோதும், நிதிநிலை எதுவாக இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை தெளிவாக தெரிவித்தோம். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கமே, புதிய திட்டங்களை செயல்படுத்த நிதிப் பற்றாக்குறை உள்ளது என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தவெக அரசு கைவிரித்துள்ளது.
பொதுவாக, வெள்ளை அறிக்கையை பட்ஜெட்டுக்கு முன்னதாக வெளியிடுவார்கள். ஆனால் இவர்கள் பட்ஜெட் மற்றும் ஆளுநர் உரைக்கு முன்னதாக இதை வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம், நாளை ஆளுநர் உரையில் புதிய திட்டங்களை சொல்ல வேண்டும்; கொடுத்த வாக்குறுதிக்கான கொள்கைகளை சொல்லும்போது இந்த திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவதாக அவர்கள் சொல்ல வேண்டும். அதில் புதிய திட்டங்களை சொல்ல எங்களுக்கு வாய்ப்பில்லை என்பதை முன்னதாகவே தெரிவித்திருக்கிறார்கள் என கருதுகிறேன்.
தவெக அரசு தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தால், இந்த ஆட்சியின் முடிவில் மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியை தொடும் என்பதை நான் சவாலாக சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் திமுக ஆட்சியில் பெறப்பட்ட சராசரி கடனை விட, தற்போதைய அரசு குறைவாக கடன் வாங்கினால் நான் வகிக்கும் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.
குஜராத்தை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்கள். தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டம், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களை அவர்கள் செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற நலத்திட்டங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் நிதி குறைப்பு காரணமாகவே வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், வெள்ளை அறிக்கையில் ஒன்றிய அரசு பற்றி குறிப்பிடப்படவில்லை. நிதி மேலாண்மையை சரியாக செய்யாததால்தான் கடன் அதிகரித்தது என்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சராசரியாக ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். மூலதனச் செலவுகளுக்காக ரூ.50,000 கோடி செலவிட்டாலும், அரசின் மொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். மக்களின் நலத் திட்டங்களுக்கான அதிகளவில் செலவு செய்துள்ளோம். உங்களுக்கும் இவ்வளவு பணம் தேவைப்படும்.
தமிழ்நாட்டின் சொந்த வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். அப்படி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது? டெல்லி சென்று 'தமிழ்நாடு 2-வது பெரிய பொருளாதாரம்' என்று முதல்வர் சொன்னாரே... இதெல்லாம் எப்படி சாத்தியமானது?
தமிழகத்தின் நிதி நிலையை முன்னதாகவே நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அதன் பிறகுதான் தவெக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. திமுக ஆட்சிக்கு வரும்போதும் இதுபோன்ற நெருக்கடி இருந்தது.
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்தோம். நிதிநிலையில் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஆட்சி நிறைவேற்றியது. ஆனால் தவெக ஆட்சியோ, நிதி நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என சொல்லாமலே சொல்கிறது.
ஆரம்பத்திலேயே அம்பேல் என தெரிவித்துவிட்டனர். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள், நீங்கள் அளித்த வாக்குறுதிகள் ஆகியவைகளை நிறைவேற்றிவிட்டு ஓர் அறிக்கையை கொடுத்தால் சரியாக இருக்கும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.