சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ரூ.98 கோடி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் உள்ள குளறுபடிகள், கால தாமதம் தொடர்பாக தமிழக அரசின் பொதுத் துறைச் செயலர், ஊழல் தடுப்பு ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுத்துறைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், ஊழல் தடுப்பு ஆணையர் கே.மணிவாசன், லஞ்சஒழிப்புத் துறை இயக்குநர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதம் வேண்டு மென்றே ஏற்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அனுமதிகோரி அனுப்பிய கடிதம் தற்போதும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இதன்பேரில் நினைவூட்டல் கடிதங்களும் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் எந்த அதிகாரியையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அந்த அதிகாரிகள் இருவரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.