சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
10 மீனவர்கள் கைது: இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் கடலுக்குச் செல்லவில்லை.
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட மீனவர்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) காலையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனிடையே, நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்துள்ளனர். மேலும், படகில் இருந்த ஜார்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோக ராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 மீனவர்களை இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பாகவும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
13-01-2026 அதிகாலையில், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது.
மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட, இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொள்க.
பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுத்திடவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.