கோப்புப்படம்
திருச்சி: தமிழக அளவில் டிட்டோ ஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், டிட்டோ ஜாக்கில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக்சார்பில் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், அதற்கடுத்த நாள் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் பாதிப்படையும்.
மேலும், டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் பலர், ஜாக்டோ ஜியோவிலும் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இதனால் ஏற் படும் நடைமுறைச் சிக்கல்களால் போராட்டம் தொய்வடைய வாய்ப்புள்ளது என்பதால், டிட்டோ ஜாக் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துகள் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குப் பிறகு டிக்டோ ஜாக் போராட்டம் நடத்தப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.