பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகில் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கக்கோரி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதிய, இஎஸ்ஐ உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏஐடியுசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச்செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம், எழும்பூரில் உள்ளதமிழ்நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பெரியசாமி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பியவாறு, லாங்க்ஸ் கார்டன் சாலையிலிருந்து முற்றுகைக்கான பேரணியைத் தொடங்கினர்.
அப்போது போலீஸார் அவர்களை தடுத்தி நிறுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய நிலையில், தொடர்ந்து முன்னேறியதால் போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். போராட்டத்தில் ஏஐடியுசிதேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநில செயலாளர்டி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் போராட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரக்கூடிய ஆயிரக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ச்சியாக மாநாடுகள், பேரணி, ஆர்ப்பாட்டம் என ஓராண்டுக்கும் மேலாக பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர்.
அரசுக்கு எதிரானது அல்ல: இந்த போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள். இதே அரசுதான் மீண்டும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாக விரும்பக்கூடியவர்கள்.
இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய பாஜக அரசின் கடந்த கால பட்ஜெட்டுகளில் மக்கள் என்னென்ன ஏமாற்றங்களை சந்தித்தார்களோ, அதேதான் 2026-27 பட்ஜெட்டிலும் நடந்திருக்கிறது. பிரதமர் மோடியின் கண்களுக்கு தெரிவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும்தான். சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் பாஜக அரசுக்குஇல்லை.
எனவே வரும் பிப்.12-ம் தேதி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.