சென்னை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தவெக அரசு, பெண்களுக்கு வழங்குவதாகக் கூறிய ரூ.2,500 மாத உதவித்தொகையை ஏறக்குறைய 1.57 கோடி பெண்களுக்கு வழங்க அரசுக்கு ரூ.47,000 கோடி தேவைப்படும்.
இதே போல், 79 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.15,000 வழங்க ரூ.11,910 கோடியும், 1.85 கோடி பேருக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்க ரூ.6,990 கோடியும், மாணவர்களுக்கான வாக்குறுதிகளுக்கு ரூ.8,438 கோடியும், 96 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்க ரூ.9,500 கோடியும் தேவைப்படும்.
இந்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்ற ஏறக்குறைய ரூ.1 லட்சத்து 338 கோடி தேவைப்படும். இந்த வருமானத்தை அரசு எங்கிருந்து பெறப்போகிறது? தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து முதலமைச்சரிடம் ஒருபதற்றமோ, போர்க்கால நடவடிக்கை எடுக்கும் எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த அரசின் செயல்பாடுகளுக்கு ரிப்போர்ட் கார்டு கொடுக்க வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பில் 'டோட்டல் ஃபெயில்' மார்க்தான் கொடுக்க முடியும்.
தமிழக அரசு தொடங்கியுள்ள 'சிங்கப்பெண்’ படையின் கண்களுக்கு பெண்களைக் கசக்கிப் போடும் ஓநாய்கள் ஏன் தெரியவில்லை? இவ்வாறு அவர் தெரிவித்தார்.