“எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார் என்றால் அதில் என்ன தவறு? கூட்டணி கட்சிகளை மிரட்டி தொகுதிகளை திமுக குறைத்துள்ளது” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் உகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் இரா.அர்ஜுனமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ் என்ற சொல்லையே மெல்ல மெல்ல மறைத்து, திராவிடம் என்ற சொல்லை திணிப்பது தமிழுக்கு திமுக இழைக்கும் மிகப்பெரிய அநீதியாகும்.
தமிழின் தொன்மையையும், தனித்துவமான அடையாளத்தையும் சிதைப்பதற்காகவே திராவிடம் என்ற போர்வையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு, யுகாதி திருநாள் வாழ்த்து தெரிவிப்பதில் கூட மு.க.ஸ்டாலின் பிரிவினையைத் தூண்டுவது மிகுந்த வேதனைக்குரியது.
உண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி. கூட்டணித் தலைவர்கள் டெல்லிக்குச் சென்றாலே அது குழப்பம் என்று விமர்சிக்கும் திமுகவினர், தங்கள் கூட்டணியில் நடக்கும் அவலங்களைக் கவனிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார் என்றால் அதில் என்ன தவறு?
ஆனால், திமுக கூட்டணியில் நிலைமை என்ன? 6 தொகுதிகள் கேட்ட மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மிரட்டி, தொகுதிகளைக் குறைத்திருக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள்.
பாஜக என்ற பூச்சாண்டியைக் காட்டி, தனது கூட்டணிக் கட்சிகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது திமுக. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, பாஜக-வுக்காகத்தான் இடங்களை விட்டுக் கொடுத்தோம் என்று அவர்களும் மழுப்புகிறார்கள். இது இண்டியா கூட்டணி அல்ல; இது ஒரு அடிமை கூட்டணி.
நடிகர் விஜய் யாரை மதவாத கட்சி என்கிறார்? பாஜக ஒருபோதும் மதவாத கட்சி இல்லை.ஒருவேளை இந்துக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மறுக்கும் திமுக-வை அவர் குறிப்பிடுகிறாரா? தவெக தற்போது குழப்பத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தனித்து நின்று யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதே யதார்த்தம். அந்தவகையில், விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்கமுடியாது. கனவு காணுவதற்குஎல்லோருக்கும் உரிமை உண்டு. அதே போல், விஜய்யும் கனவு காண்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.