சென்னை: தமிழ் மரபு மிகவும் வளமானது, மிகவும் பழமையானது என்றும் தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் இருப்பதாகவும் குடியரசு தின உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77-வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின உரையில் கூறியிருப்பதாவது: புதிய பாரதத்தின் எழுச்சியை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்கள் முழுமையான வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். உலகின் முதல் 3 புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக பாரதம் உருப்பெற்றுள்ளது. அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பாதுகாப்புத் துறையில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களின் தொழில்நுட்ப மேன்மையை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது.
செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட ரோபாட்டிக்ஸ், குவாண்டம்கம்ப்யூட்டிங், நானோ தொழில்நுட்பம் போன்ற புதுயுகத்தொழில் நுட்பங்களின் களத்தில், சிறந்து விளங்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், இந்தியா முன்னணிநாடாகத் திகழ்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், ஏறத்தாழ ரூ.28 லட்சம் கோடி மதிப்புள்ள 21.6 பில்லியன் பரிவர்த்தனைகளை யுபிஐ செயல்படுத்தியுள்ளது. இந்த அளவு இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பின் வலிமையைக் காட்டுகிறது.
நமது தமிழ் மரபு பற்றி பாரத தேசத்தவர் ஒவ்வொருவரும் பெருமை கொள்கிறார்கள். தமிழ்மரபு மிகவும் வளமானது, மிகவும்பழமையானது, சோழர்களின் பெருமைமிகுந்த பாரம்பரியம் தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரமாண்டமான விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்ப் பாரம்பரியம் மீது மிகுந்த பற்று கொண்ட பிரதமர் பங்கேற்று, ராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் நிறுவப்படும் என்ற அறிவித்தார்.
காசி-தமிழ்ச் சங்கமம் காசி-தமிழ்ச் சங்கமம் மூலம் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான ஆழமான, பழமையானதொடர்பை கொண்டாடினோம்.இரு பகுதிகளையும் இணைக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு காலப் பழமையான கலாச்சார மற்றும் ஆன்மிக தொடர்ச்சியைப்புதுப்பித்தோம். மொழிகளும் கலாச்சாரமும் மக்களை ஒன்றிணைக்கின்றன. புரிதலையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கின்றன.
வந்தே மாதரம் பாடல் தமிழக மக்களின் இதயங்களில் நீண்ட காலமாக சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தேசபக்தி, ஒற்றுமை பற்றிய செய்திகளின் மூலம் இந்தப் பாடல் பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது. இளைஞர்களின் ஆற்றலும் முன்முயற்சியும் நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கின்றன. இளம் கண்டுபிடிப்பாளர்களும், படைப்பாளிகளும் தங்களின் சிந்தனைகளை செயல்வடிவமாக மாற்றுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள்,கைவினைஞர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ‘தேசத்துக்கே முதன்மை’ என்ற உறுதிமொழிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். சுயசார்புள்ள, வளர்ந்த பாரதத்தை 2047-ம் ஆண்டுக்குள் உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.