ராஜேஷ்குமார், விஸ்வநாதன்

 
தமிழகம்

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங். எம்எல்ஏக்கள் இருவர் அமைச்சர் ஆகிறார்கள்

ஐயுஎம்எல், விசிகவில் இருந்தும் தலா ஒருவருக்கு இடம் ; 23 அமைச்சர்கள் பதவியேற்பதாகத் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். ஐயுஎம்எல், விசிக கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருடன் சேர்த்து மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) ஆதரவுடன் கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தைக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி அதிமுக எம்எல்ஏ.க்களில் ஒரு பிரிவினரும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் 9 அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? கூட்டணிக் கட்சிகளில் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோரை தமிழக அமைச்சரவையில் இணைக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி வழங்கியுள்ளார். அவர்கள் இன்று (மே 21) அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

59 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இணைவது எங்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். தமிழக மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள். மக்களுக்கான நலத்திட்டங்களையும் முன்னேற்றமான ஆட்சியையும் முன்னெடுத்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கனவை நனவாக்க அவர்கள் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செ.ராஜேஷ்குமாரிடம் கேட்ட போது. "இன்று ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்கும் மகிழ்ச்சியான நாள். மக்கள் பணி செய்ய கட்சி எனக்கு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. கட்சி தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, மக்கள் பணி மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வேன்" என்றார்.

தமிழக அமைச்சரவையில் முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் வரை இருக்கலாம். தற்போது முதல்வர் மற்றும் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கியுள்ளனர். அமைச்சரவையில் இன்னும் 24 அமைச்சர்கள் இடம்பெற முடியும். ஆனால், இன்று 23 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் உறுதியாகி உள்ளது. விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களையும் சேர்த்து இன்று நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று நேற்றிரவு தகவல்கள் வெளியாகின.

அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு,மக்கள் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மக்கள் மாளிகையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அயோத்தி தாசரின் 181-வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்குப் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ்அர்ஜுனா நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார். முதல்வர் விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நோக்கம், சமூக நீதியின் அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதாகும். அந்த வகையில் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்த காங்கிரஸ், அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் கொள்கை முடிவுக்கு தவெக எப்போதும் மதிப்பளிக்கும். விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளை அமைச்சரவையில் பங்கு பெற முதல்வர் விஜய் அழைத்துள்ளார். இதுகுறித்து பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. ஒரு குடும்பத்தைப் போல அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் விருப்பம். இந்த அரசு எப்போதும் சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளில் உறுதியாக இருக்கும்.

தவெக வெற்றி பெற்ற பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஒரு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யாமல் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எப்படிக் கொண்டு வருவது என்று முயன்றார். திமுகவுடன் இணைந்து ஒரு ரகசியக் கூட்டணியை உருவாக்கி, தமிழக மக்களின் தீர்ப்பை மாற்றி, பின்புற வாசல் வழியாக மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பழனிசாமி கடைசி நிமிடம் வரை திட்டமிட்டார்.

ஆனால், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நல்லாட்சியை உருவாக்கவும் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், திருமாவளவன், ஐயுஎம்எல் ஆகியோர் தவெகவுடன் ஓரணியில் திரண்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவுக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சி வரும் என்று கூறிய ஸ்டாலினும் உதயநிதியும் தேர்தல் முடிந்ததும் கொள்கைகளை மறந்து அதிமுகவுடன் கைகோக்க முயன்றனர். திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்ற பழனிசாமியின் செயலால் அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டது.

பிளவுபட்ட அதிமுகவின் ஒரு குழுவை சி.வி.சண்முகம் வழிநடத்துகிறார். அவர் அதிகாரத்துக்கோ, அமைச்சர் பதவிக்கோ ஆசைப்படவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை மீட்கவும், கட்சியைப் பாதுகாக்கவும் போராடுகிறார். சி.வி.சண்முகம் தரப்பு தவெகவுக்கு ஆதரவு அளித்ததை அரசியல் லாபமாகப் பார்க்காமல், தோழமை உணர்வுடன் பார்க்கிறோம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. அதிமுக என்ற கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே தவெகவின் எண்ணம்.இவ்வாறு ஆதவ் அர்ஜுனா கூறினார்.

SCROLL FOR NEXT