துக்ளக் வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். உடன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன்,காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர். படம்:எஸ். சத்தியசீலன்
சென்னை: தமிழகத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது என்று ‘துக்ளக்' ஆண்டு விழாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
‘துக்ளக்' வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை, ஆழ்வார்பேட்டை, நாரத கான சபா அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது கூறியதாவது: தமிழ் மொழி பாரம்பரியமும், தொன்மையும் மிக்க மொழி. பிரதமர் மோடி தமிழை உலக அரங்கில் எடுத்துச் சென்று வருகிறார்.
உலக அரங்குகளில் திருக்குறளின் பெருமைகளை கொண்டு செல்கிறார். குறளில் ஆட்சி நிர்வாகம், அறநெறி, மனிதாபிமானம் என அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன. பண்டைய தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்ந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கியது. ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. தமிழகத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியுாது. இரண்டும் பின்னிப்பிணைந்தவை. ஆனால், சமீப காலமாக சனாதனம் மீதான மாண்பு குறைந்து வருகிறது. சனாதனம் குறித்து கேலியும் விமர்சனமும் செய்யப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மும்மொழிக்கொள்கை மூலம் மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியும். பல மொழிகளை கற்கும்போது அவர்களுக்கு அது பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் அண்மைக்காலமாக தமிழ்மொழிக் கல்வி சேர்க்கையில் பின்னடைவு ஏற்பட்டு ஆங்கிலவழிக் கல்வி மோகம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ்மொழி கல்வி சேர்க்கை 32 சதவீதம் குறைந்து, ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன், திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ஆகியோர் உரையாற்றினர். ராம.ஸ்ரீனிவாசன் பேசும்போது, “இந்தி எதிர்ப்பில் உருவான கட்சி திமுக. தேசத்துக்கு எதிரான சித்தாந்த மரபை கொண்டது அந்த கட்சி. எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே பேசி வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமானால் அதற்கு வலிமையான கூட்டணி தேவை. அதனால்தான், அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துள்ளது” என்றார்.
திருச்சி வேலுச்சாமி பேசுகையில், “தற்போது இருக்கின்ற இதே கூட்டணி தொடரும் என்று சொல்ல முடியாது. யார் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் பங்கு தருகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிடுவர். 2026 தேர்தலில் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்கு அளிக்கும் கட்சி மட்டுமே வெற்றிபெற முடியும்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, அரசியல், ஆன்மிகம், தொடர்பாக வாசகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ‘துக்ளக்’ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பதிலளித்தார். அப்போது, ‘‘கட்சி பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டது பாஜகவும், அண்ணாமலையும் சேர்ந்து எடுத்த முடிவு. திமுகவை அகற்றுவதற்கான உத்தியை எடுத்தாக வேண்டியது அவசியம்.
அந்த வகையில் அமித்ஷா எடுத்த உத்திதான் இது. அவர் திறமைசாலி, தமிழக அரசியலை கையில் எடுத்துள்ளார். அண்ணாமலையும் அதற்கு ஒத்துழைப்பார். புதிய கட்சியான விஜய் கட்சியை பொருத்தவரையில் தேர்தலில் போட்டியிட்டால்தான் அக்கட்சியின் வாக்கு சதவீதம் தெரிய வரும்” என்றார்.