கரூர்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் கோயில் முன் யாசகம் பெற முயன்ற நிலையில், போலீஸார் அவரை தடுத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு பணியிடை நீக்க காலத்தில் வழங்கப்படும் பிழைப்பூதியம் எனப்படும் அரை சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு இன்று (நவ. 21ம் தேதி) பிரபாகரன் தனது மகனுடன் அமர்ந்து யாசகம் பெற முயன்றார்.
இதனைக் கண்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவருக்கு அறிவுரை கூறி அவரை அங்கிருந்த புறப்பட அறிவுறுத்தினார்.
இதையடுத்து பிரபாகரன் போலீஸார் காலில் விழுந்து கதறி அழுதார். அதன்பின் மகனுடன் அங்கிருந்த புறப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிரபாகரன் கூறியது: பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தேன்.
என் மீது போடப்பட்ட வழக்கால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். எனக்கு பிழைப்பூதியமாக அரை மாத சம்பளமும் இரு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் வேலையும், வருமானமும் இன்றி குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி உள்ளேன். அதற்காக மகனுடன் கோயில் முன் யாசகம் பெற வந்தேன் என்றார்.