சென்னை: நீட் தேர்வை முன்னிட்டு, மாணவர்களின் வசதிக்காக, வரும் 21-ம் தேதியன்று வாரநாட்கள் கால அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை ( 21-ம் தேதி) நடைபெறவுள்ளது. தேர்வு எழுதச் செல்லும் மாணவ - மாணவிகள் எளிதாகப் பயணம் செய்வதற்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முக்கிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், வழக்கமான வாரநாட்களில் இயக்கப்படுவது போன்ற அட்டவனைப்படி புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும்.மேலும், முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெறும் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல், கடற்கரை - அரக்கோணம் - திருத்தணி வழித்தடத்தில் மட்டும் புறநகர் ரயில்கள் தற்போதுள்ள அட்டவணையின்படி இயக்கப்படும்.
அதேபோல, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட (ஏசி) புறநகர் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். இவைதவிர, மற்ற அனைத்து சென்னை புறநகர் வழித்தடங்களிலும் வாரநாட்களுக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேக நீட் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த உதவி மையங்கள் மூலம் ரயில்களின் விவரங்கள், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.