சென்னை: ‘தமிழகத்தின் அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் திமுகதான்’ என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நாளும் அறிவாலயத்துக்கு வரும் தொண்டர்களின் முகம் கண்டு நான் ஊக்கம் பெறுகிறேன்.
தேர்தல் முடிவுகளைக் கடந்த உணர்வே நம் வலிமை. வெற்றி பெற்றால் கொண்டாடுவதுமில்லை. தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை.
தோல்வி யடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்துபோல திமுக அதிக வேகத்துடன் திரும்பவும் களத்துக்கு வரும். ஏனெனில், திமுக என்பது இனம், மொழி காத்திடும் சமூகநீதி இயக்கம்.
அமைப்புரீதியில் மாற்றங்கள்
தமிழகத்தின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகதான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்கும் வகையில், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்வதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.
கருணாநிதியின் 103-வது பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி நமக்கான புத்தெழுச்சி தினமாக அமையட்டும். தமிழகம் முழுவதும் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்.
இளைஞர்களின் பங்களிப்பு
கடந்த 2 வாரங்களாக கட்சியில் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து சமூகதளங்களிலும், கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகளை காணொலிகளாக பரப்புங்கள்.
திமுகவினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும். நமது தமிழகத்தின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.