சீர்காழி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000-த்துக்கு கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நேற்று முன்தினம் பேட்டியளித்திருந்தார். அதில் ‘8,000 ரூபாய்க்கான கூப்பன் திட்டத்தில் இன்னும் மக்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை என்று எதிர்க்கட்சியினர் ஒரு கருத்தைச் சொல்கிறார்களே?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், ‘அந்த வாக்குறுதி பெரிய அளவில் ‘ஹிட்’ ஆகிவிட்டது. அதனாலேயே சிலர் அவதூறு பரப்புகிறார்கள் என்று கருதுகிறேன். இலவச டிவி தருவோம் என்று கலைஞர் வாக்குறுதி கொடுத்தபோதும் கூட ஏகப்பட்ட ஐயங்களை எழுப்பினார்கள். நடைமுறைப்படுத்திக் காட்டியது திமுக அரசு. அதே போல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரூ.8,000-த்துக்கான கூப்பன் திட்டத்தையும் வெற்றிகரமாக அமல்படுத்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவோம்’ என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில், சீர்காழியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ரூ.8,000 கூப்பன் திட்டம் பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கிப் பேசினார். அவர் பேசியதாவது: பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். முதலில் இல்லத்தரசி திட்டம். முதல் பந்தே சிக்சர்தான். இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம். எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன். இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்.
உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம். என்னென்ன பொருள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு – இதில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் ஆலோசனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, நம்முடைய குடும்பத் தலைவிகளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்டும். அதற்காகத்தான் இந்தத் திட்டம்.
இங்கு தாய்மார்கள் இருக்கிறீர்கள். ஒரு புடவை வாங்குவதற்கு கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்குச் சென்று அந்தப் புடவையை வாங்கலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள். நல்ல கலரா? இது நமக்கு மேட்ச் ஆகுமா? சாயம் போகுமா? தண்ணீரில் போட்டால் சுருங்குமா? அதைத் தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, இது என்ன சில்க்கா? நைலக்சா? காட்டனா? இவ்வளவும் பார்த்துதான் வாங்குவீர்கள். ஒரு புடவை வாங்க, 250 புடவைகளை எடுத்து கடைக்காரர் எடுத்துப் போடுவார். அதை எடுத்துக் கொண்டு வெளியே எடுத்துச் சென்று சூரிய வெளிச்சத்தில் பார்ப்பீர்கள். எந்த வெளிச்சத்தில்? சூரிய வெளிச்சத்தில்...
எப்படி கருணாநிதி சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ? அவரது மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன். தமிழகத்தில் பல்வேறு சாதனைகள், அனைவருக்கும் நன்மைகளை செய்து தந்துவிட்டு, கம்பீரமாக, தெம்புடன், திராணியுடன் உங்களிடம் நான் ஆதரவைக் கேட்கிறேன்.
ஆனால், இப்படி பேசுவதற்கு எந்தக் கண்ட்டென்டும் இல்லாமல், கண்டதையும் பேசும் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி வலம் வந்து கொண்டிருக்கிறார். நாள்தோறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது அல்லவா... அதில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூட கூட, தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே கீழே இறங்கிக் கொண்டே போகிறது.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத பழனிசாமி, வேறு எதற்காகத்தான் பேசுவார்? தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருப்பதால்தான், தொகுதி மறுவரையறைப் பற்றி, பா.ஜ.க. அரசு அறிவிப்பதற்கு முன்பே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தினோம். நடைபெறப் போகும் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான தேர்தல். இந்த தேர்தலில் திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.