நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா... அவர்களால் அப்படிச் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத் திறப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பட்டாக்களை வழங்கி, நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு நிலம் என்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறோம். அடுத்து ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய லேப்டாப்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாடு தனிக்காட்டு ராஜா. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தான், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மகளிர் பணிபுரிகின்றனர்.
11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். மின்னணு பொருள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் துறை, ஸ்டார்ட் அப் தரவரிசை ஆகியவற்றில் தமிழ்நாடு தான் ‘நம்பர் 1.’ இதையெல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு மூச்சு வாங்குகிறது. இதுஎல்லாமே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மத்திய அரசின் தர வரிசை பட்டியலிலும், உலக அளவிலான விருதுகளை பெறுவதிலும் கூட நம்பர் ஒன் தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதா... உங்களால் சொல்ல முடியுமா? நான் வெளிப்படையாகவே சவால் விடுகிறேன்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாய்ப் போன தமிழ்நாடு, திராவிட மாடல் ஆட்சியில் 4 ஆண்டுகளில் துள்ளிக் குதித்து எழுந்துள்ளது. இனி எப்போதும் ஏறுமுகம் தான். மத்திய அரசு வஞ்சகத்துடன் தமிழ்நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வரவேகூடாது என ‘ஸ்பீடு பிரேக்’ போடுவதையும் தாண்டி சாதனை படைத்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு 2026 தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் வறுமை, மத வன்முறை, வேலைவாய்ப்பின்மை இதுதான் இருக்கிறது. இதுதான் பாஜக மாடல் அரசு. கிறிஸ்துமஸ் அன்று கூட மாற்றுத்திறனாளி கிறிஸ்தவரை தாக்கி மதவெறியை தூண்டுகிற மோசமான நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த மாடலைத் தான் தமிழகத்தில் கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப உஷார். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கிற தர்காவை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு வரும் இந்து சகோதரர்களுக்கு பள்ளிவாசல்களில் இருந்து இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள்.
தை முதல்நாளில் தேவாலயங்களில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்தால், ‘பிரியாணி, கேக் எங்கே?’ என்று உரிமையாகக் கேட்கிறார்கள. ‘எம்மதமும் சம்மதம்’ என்ற தமிழக மக்களின் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதவாத சக்தியான பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. ஆனால், உண்மையான ஒற்றுமையுடன் வாழும் தமிழக மக்களிடம் எப்போதும் மதவெறியை தூண்ட முடியாது.
இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, திராவிட மாடல் அரசு இருக்கும் வரை பாஜக-வின் மதவாத ஆட்டத்துக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ்நாட்டு மக்கள் வாக்குகளால் உங்களை விரட்டியடிப்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் பாச்சா பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.