நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர். | படம்: மு.லெட்சுமி அருண் |
திருநெல்வேலி: நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை, மக்கள் சக்தியுடன் திரும்பப் பெற வைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694 கோடி மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, 45,477 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பேசியதாவது: கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, மத்திய பாஜக அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் நடைபெறக் கூடாது, மீறி நடந்தாலும், முடிவுகள் வெளியே வரக் கூடாது என்பதுதான் அவர்களது எண்ணம்.
இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு, நமது ஆய்வுகள் தெரிவதில்லை. நம் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது. ஈராயிரம் ஆண்டுகால சண்டையில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்து வருகிறோம்.
பிரதமருக்கு அழைப்பு: 2021 மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு, தற்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் பார்வையிட வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். நேரில் இவற்றைப் பார்த்தால்தான் தமிழர் நாகரிகத்தின் தொன்மை புரியும். மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தை பாஜக அரசு திட்டமிட்டு முடக்கியிருக்கிறது. மகாத்மா பெயரையே நீக்கி, பெரும்பாலான இந்திய மக்களுக்குப் புரியாத இந்திப் பெயரை வைத்திருக்கிறார்கள். மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பாஜகவுக்கு பிடிக்காது.
அதனாலேயே, அதை யெல்லாம் வாழ்நாளெல்லாம் வலியுறுத்திய காந்தியையும் அவர்களுக்கு பிடிக்காது. நூறு நாள் வேலைத் திட்டத்தை பல்வேறு வழிகளில் முடக்கப் பார்த்து தற்போது மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மாநில அரசு 40 சதவீத நிதி தர வேண்டுமாம். ஏழைகளுக்கும், பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்துக் குரல் கொடுத்தாலும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இதைப் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருக்கிறார். மக்கள் சக்தியின் துணையோடு இந்த சட்டத்தை திரும்பப் பெற வைப்போம். ஜிஎஸ்டி, அடாவடி ஆளுநர், மெட்ரோ நிராகரிப்பு என பாஜக அரசு எத்தனை நெருக்கடிகளைக் கொடுத்தாலும், அனைத்து வகையிலும் தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக உயர்த்தியுள்ளோம்.
எனவே, அடுத்து அமையப் போவதும் திமுக ஆட்சிதான். திராவிட மாடல் அரசு2.0 இன்னும் பல மகத்தான திட்டங்களைக் கொண்டுவரும். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் கனிமொழி, ராபர்ட் புரூஸ், ராணி குமார், எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்துகொண்டனர்.