தமிழகத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு ராகுல்காந்தி மற்றும் தெலங்கானா, கர்நாடகா முதல்வர்கள் வரவுள்ளனர். தமிழகத்தில் ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரம் குறித்து சில தினங்களில் அறிவிக்கப்படும். பிரியங்கா காந்தியும், தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகிறார். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள்.
புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வந்த போது, தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் பொதுக்கூட்டம் இருந்தது. அதேநேரம் ராகுல்காந்தி அவசரமாக கேரள மாநில பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டியதும் இருந்தது. அதனால், புதுச்சேரியில் இருவரும் ஒன்றாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.