சீமான்
சென்னை: இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றி விட்டதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ஜுனன், தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இதே மே மாதத்தில்தான் எங்கள் இனத்தைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையில் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு நீதி கிடைக்க தமிழக முதல்வர் விஜய் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழக மக்கள் வரலாறு காணாத மிகப் பெரிய மாற்றத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகள், இலங்கையில் எங்கள் இனம் அழிக்கப்படும்போது அதனை வேடிக்கை பார்த்ததை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அந்தத் துயரமான காலகட்டத்தில், தற்போதைய முதல்வர் விஜய் எங்களுக்காக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தார். அவர் மட்டுமல்லாது, பல அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக அன்று குரல் கொடுத்தார்கள்.
ஆனால், எங்கள் மக்களின் வலிகளைத் தற்போது சிலர், குறிப்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் உள்ளிட்டோர், தமிழக அரசியலில் வாக்கு வங்கி அரசியல் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்து கிறார்கள். எங்களுடைய வலிகளை யாரும் இங்கு சுயநலத்துக்காக விற்பனை செய்யக் கூடாது. ராமேசுவரத்துக்கு அகதிகளாக வந்த எங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஒருவேளை உணவு கூட சீமான் வழங்கவில்லை.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தை சீமான் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் ஏமாற்றி விட்டார். சீமானின் மகன் அமெரிக்காவில் படிக்கிறார். ஆனால், எங்களுடைய பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் மிக மோசமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரன் தனக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், ஆமைக்கறி கொடுத்ததாகவும் சீமான் கூறி வருவதில் எள்ளளவும் உண்மை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.