பிரதிநிதித்துவப் படம்
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு செப்டம்பர் 22-ம் தேதி தேதி வரையிலும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 12 அன்று கடலுக்குச் சென்ற வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
படகிலிருந்த ஆரோக்கிய ஜனதன், அந்தோணி பிச்சை, டான்போஸ்கோ, பிரபு, ஆரோக்கிய டெவின், வேலுச்சாமி, சுப்பையா, ஆரோக்கிய ஜெனிஸ்டன், ஸ்டெவின் ஆகிய 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று மன்னார் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 9 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து 9 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை நீதிபதி செப்டம்பர் 22-ம் தேதி வரையிலும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து 9 மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.