சென்னை அமைந்தகரையில் உள்ள பள்ளியில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளரான தோட்டக் கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.

 
தமிழகம்

தமிழகத்தின் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்: இன்றும் நடைபெறுகிறது

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. ஏராளமானோர் படிவங்களை சமர்ப்பித்தனர். சிறப்பு முகாம் இன்றும் நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான (எஸ்ஐஆர்) கணக்கெடுப்பு பணிகள் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்றன. அதை தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

1.85 லட்சம் படிவங்கள்: அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் என 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் தகுதி உள்ளவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டிச.26-ம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.85 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தகுதி உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிச.27, 28-ம் தேதிகள் மற்றும் ஜன.3, 4-ம் தேதிகள் என 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், பெயர் நீக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

சென்னை மாவட்டத்தில் அடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 4,079 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மக்கள் அருகில் உள்ள முகாமுக்குச் சென்று படிவம் கேட்டபோது, ‘‘உங்கள் வசிப்பிடத்துக்கான பாகத்தில் மட்டும்தான் படிவங்களை பெற வேண்டும். இங்கு தர முடியாது’’ என்று கூறி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) அனுப்பி வைத்தனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு வீடு மாறி வெளியூர் சென்றவர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கச் சென்றபோது, பழைய இடத்துக்கு சென்று நீக்கம் செய்துவிட்டு, புதிய இடத்தில் சேர்க்குமாறு அறிவுறுத்தினர்.

முந்தைய நடைமுறைப்படி, ஏற்கெனவே வாக்குரிமை உள்ளவர்கள் அதுபற்றி குறிப்பிட்டு படிவம் 6-ஐ சமர்ப்பித்தாலே அலுவலர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், இந்த புதிய நடைமுறையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வாக்குச்சாவடிகளில் இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்கிடையே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுதொடர்பான ஏற்புரைகள், மறுப்புரைகள் டிச.19 முதல் ஜன.18-ம் தேதி வரை பெறப்பட்டு, அதே காலகட்டத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். அதுபற்றிய அறிவிப்புகள் பிப்.10-ம் தேதி வரை வெளியிடப்படும்.

எஸ்ஐஆர் வழிகாட்டுதலின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக்கூடிய ஆவணத்தை விசாரணையின்போது வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதிவாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.

மேலும், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, இந்த நடைமுறை குறித்துவிளக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT