சென்னை: “தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக திருநெல்வேலியில் இன்று தந்தை மற்றும் அவருடைய 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் அலட்சியப் போக்கால் இன்று சமூக விரோதிகளின் கூடாரங்களாக தென் மாவட்டங்கள் மாறியுள்ளது” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும் மற்றொரு மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு இன்று சமூக விரோதிகளின் கொலைப்பசிக்கு ஆளாகி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது. அதுவும் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி சம்பவங்கள், முன்விரோத சம்பவங்களால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமோர் ரத்த சாட்சி.
ஆனால் சட்டம் - ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியப் போக்கால் இன்று சமூக விரோதிகளின் கூடாரங்களாக தென்மாவட்டங்கள் மாறி கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இடங்களாக உருவாகியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது.
தினந்தோறும் இத்தனை கொலைகள், குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டு சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்த வேண்டிய முதல்வரோ அதனை விட்டு விட்டு தனது கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.
அந்தச் சிறுவர்களின் மரண ஓலங்கள் உங்கள் காதுகளில் விழவில்லையா முதல்வர் விஜய்?. ஈவு இரக்கமற்ற முறையில் இத்தகையை படுபாதகச் செயலைப் புரிந்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர காவல்துறையை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.