நாகப்பட்டினம்: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா நாகையில் நாளை (டிச.20) நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவர் 2015-ல் தனது 90-வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை நாகூரில் அவரது வீடு அமைந்துள்ள தைக்கால் தெருவுக்கு ‘இசை முரசு நாகூர் ஹனிபா தெரு’ என்று பெயர் வைக்கப்படும் என்றும், ரூ.2 கோடியில் மேம்படுத்தப்பட உள்ள நாகூர் சில்லடி கடற்கரையில் அமைக்கப்படும் பூங்காவுக்கு நாகூர் ஹனிபா பெயர் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, அவரது வீடு உள்ள தெருவுக்கு நாகூர் ஹனிபா பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில், நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா, நாகையில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.20) நடைபெறுகிறது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, நாகூர் ஹனிபாவின் குடும்பத்தினரை கவுரவித்துப் பேசுகிறார். முன்னதாக, நாகூர் சில்லடி கடற்கரையில் நாகூர் அனிபா பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை துணை முதல்வர் திறந்துவைக்கிறார்.