

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை செயல்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்து, அதற்கு பதிலாக, ‘விபி-ஜி ராம் ஜி’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததற்கு தமிழக அரசின் ஆழ்ந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் 2006 முதல் செயல்படும் MGNREGA திட்டத்தில், ஆண்டுக்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்பட்டது.
125 நாட்களாக அதிகரித்ததற்கு வரவேற்பு: புதிய மசோதாவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்த திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக, கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் விதமாக உள்ளது.
60:40 நிதிப் பங்கீடு பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப்பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, ‘விபி-ஜி ராம் ஜி’ சட்ட மசோதாவை செயல்படுத்த வேண்டாம். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.