ஷிகெல்லா பாட்டீரியா மாதிரி படம்

 
தமிழகம்

கேரளத்தில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ நோய் தொற்று எதிரொலி - கண்காணிப்பு வளையத்தில் மதுரை அரசு மருத்துவமனைகள்

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: கேரளத்தில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று எதிரொலியாக மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கேரளாவில் வேக மாகப் பரவி வருகிறது. இது அசுத்தமான உணவு, குடிநீர், சுகாதாரமற்ற சூழல், பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவும் குடல் நோயாகும். கோழிக் கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தொற்று, மனிதர்களின் குடலை தாக்கி கடுமையான வயிற்றுப் போக்கு, தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான பாக்டீரியா ஆகும். இவை 10 முதல் 100 வரை எண்ணிக்கையில் உடலுக்குள் சென்றாலே எளிதில் தொற்றை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் சுகாதாரமாக இருந்தால், இந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.

இது குறித்து மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டத்தில் இதுவரை ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இத்தொற்றில் இருந்து மக்களை காக்கவும், பாதிப்புகளைத் தடுக்கவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தீவிர கண் காணிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

கடுமையான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்காக மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. நீர்ச்சத்து குறை பாட்டைத் தடுக்க ஓ.ஆர்.எஸ். கரைசல்கள், குளுக் கோஸ் ஆகியவை கையிருப்பில் உள்ளன.

பாக்டீரியாவை துல்லியமாக கண்டறிய மலம், ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், காய்ச்சிய நீரைப் பருகுதல் போன்ற சுகாதார விழிப்புணர்வை மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம். குறிப்பாக, குழந்தைகள், முதியோர் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். இந்த நோய் அறிகுறிகள் தென் பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT