சென்னை: சட்டப்பேரவை செயலராக இருந்த சீனிவாசன் ராஜினாமா செய்ததையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் செயலராக ஆர்.சாந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை செயலராக கடந்த 2018-ல் நியமிக்கப்பட்ட கி.சீனிவாசன், 2023-ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு அப்போதைய திமுக அரசு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியது. அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைகிறது.
இந்நிலையில், சில தினங்கள் முன்னதாக அவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, சட்டப்பேரவையின் புதிய செயலராக பணி மூப்பு அடிப்படையில், சிறப்பு செயலராக இருந்த ஆர்.சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
அவரை சட்டப்பேரவை செயலராக நியமித்து ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நேற்று உத்தரவு பிறப்பித்தார். பேரவை செயலராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். எனவே, அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பும் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பேரவைச் செயலர் அறையில் சாந்தி நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பேரவை செயலக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த சாந்தி, கடந்த 1992-ல் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம், சட்டப்பேரவை செயலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின், உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், சார்பு செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், கூடுதல் செயலர் என பதவி உயர்வு பெற்று, சிறப்பு செயலராக பணியாற்றி வந்தார்.
சிறப்பு செயலர் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றினார். சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் அதிகளவில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர். தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் செயலர் சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.