செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

 
தமிழகம்

குதிரை பேர வழக்கு: காவல் நிலையத்தில் ஆஜராக 6 நாள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி இருவரும் கடந்த 25-ம் தேதி முதல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேளையும் ஆஜராகி வந்தனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பதிவு செய்த வழக்கில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்தது. அன்று காவல் நிலையத்திலும் அவர் ஆஜராகவில்லை. இதனால், கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் தலைமறைவானதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. இந்தச் சூழலில், குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் 2 வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை ஜூலை 30 முதல் ஆக.4-ம் தேதி வரை தளர்த்தி விலக்கு அளிக்குமாறு கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘டாஸ்மாக் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆஜராக இயலாத காரணத்தை விளக்கி காவல் நிலைய விசாரணை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT