கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.
கோத்தகிரி: தவெக தலைவர் விஜய் விரல் காட்டுபவர்களே எம்எல்ஏ ஆக முடியும் என தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள பேரகணியில் ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்க நேற்று வந்த செங்கோட்டையன், டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கு தவெக நகர அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, ஹெத்தையம்மன் கோயிலில் வழிபட்டு, காணிக்கை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகரின மக்கள் தங்கள் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்க அழைத்தனர்.
அதன் பேரில் நான் திருவிழாவில் கலந்து கொண்டேன். நீலகிரியை பொறுத்தவரையில் தவெக தலைவர் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ, அவர் தான் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்’’ என்றார்.