செங்கோட்டையன் |கோப்புப் படம்

 
தமிழகம்

“இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல்

செய்திப்பிரிவு

சத்தியமங்கலத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன், ‘இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என பேசியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் 50 ஆண்டுகள் பயணித்த செங்கோட்டையன் சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலைக்கே வாக்கு கேட்டு பழக்கப்பட்ட செங்கோட்டையன், பழக்க தோஷத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளருக்கு தவறுதலாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

          

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதி தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சத்தியமங்கலத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும்போது, ‘பழனிசாமிக்கு வாக்களித்தால் அது நோட்டாவாக மாறிவிடும்’ என பேசிய செங்கோட்டையன், இறுதியில் பேச்சை முடிக்கும்போது பெருங்குரலில் ‘தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்றார்.

இதனால், தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டத்தில் சலசலப்பும் சிரிப்பும் எழுந்தது. இதையடுத்து, சின்னத்தை தவறாகக் கூறிவிட்டதை உணர்ந்து சுதாரித்த செங்கோட்டையன், ‘‘இரட்டை இலை சின்னத்துக்கு நான் ஓட்டுக் கேட்டே பழகி விட்டேன். ஒரு மூதாட்டி கோபிசெட்டிபாளையத்தில் வாக்கு சேகரிக்க செல்லும்போது ‘உங்களுக்குத்தானே எப்பொழுதும் வாக்களிப்போம். இரட்டை இலை சின்னம் தானே’ என கூறினார். நான் தற்போது தவெகவில் இருப்பதைச் சொன்னேன்’’ என்று கூறி சமாளித்தார்.

SCROLL FOR NEXT