காரைக்குடியில் ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டிய சீமான்.
இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்று எதிர்காலத்தில் தமிழகம் பெரிய புரட்சியைச் சந்திக்கும். அதற்கு நான் தலைமை தாங்குவேன் என்று காரைக்குடியில் பிரச்சாரம் செய்த சீமான் ஆவேசமாகப் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாதக வேட்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். காரைக்குடி புதிய பேருந்து நிலையம், ஐந்துவிளக்கு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சீமான் பிரச்சாரம் செய்தார். நேற்று பிரச்சாரத்தின் இறுதிநாளில் தனது தொகுதிக்கு உட்பட்ட செக்காலை ரோடு என்ற இடத்தில் பிரச்சாரத்தை அவர் நிறைவு செய்தார்.
பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: மக்களில் 95 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர். செல்வந்தர்கள் ஐந்து சதவீதம்தான் உள்ளனர். செல்வந்தர்கள்தான் இன்றைய நிலையில் பணத்தை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஐந்து சதவீதமே உள்ள செல்வந்தர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும். செல்வந்தர்கள், முதலாளிகள் மட்டுமே அதிகாரத்துக்கு வர முடியும் என்றால் அது ஜனநாயகம் இல்லை. ஓட்டுக்கு நோட்டு; அது நாட்டுக்கு வேட்டு.
தேர்தல் நேரத்தில் மட்டும் அதிமுக, திமுகவுக்கு மக்கள் மேல் பாசம் வருகிறது. இரு கட்சிகளும் போட்டிபோட்டு இலவசங்களை அறிவித்துள்ளன. பெண்களைக் குறி வைத்து திமுக, அதிமுக ரூ.2,000 பணம் தருவோம் என்று அறிவித்தால், என் தம்பி விஜய் ரூ.2,500 தருவோம் என்று அறிவிக்கிறார். விஜய் தனது மனைவிக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கொடுப்பாரா? ரூ.8,000 கூப்பன் கனிமொழி, துர்கா ஸ்டானுக்கு கொடுக்கப்படுமா?
இலவசத்துக்கான பணத்தை எங்கிருந்து எடுத்துக் கொடுப்பீர்கள். நாட்டைத்தான் அடமானம் வைக்க வேண்டும். தமிழகத்தில் வேலை இல்லை; உழைப்பு இல்லை; வருவாய் இல்லை; ஆனால், இலவசம் மட்டும் இருக்கிறது. இலவசங்களால் பொருளாதாரம் சிதைந்து நாடு சீரழிந்து போகும். மேலும் பெரும் கலவரத்தைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்று எதிர்காலத்தில் தமிழகம் பெரிய புரட்சியைச் சந்திக்கும். அதற்கு நான் தலைமை தாங்குவேன். குடும்ப அட்டைக்கு ரூ.2,000 கொடுத்துவிட்டு, ரூ.2 லட்சம் கடனை நம் மீது திணிக்கின்றனர். நாங்கள் மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு வாக்களிப்போர் வாக்காளர்கள் அல்ல; புத்தம் புதிய அரசியலைக் கண்ட புரட்சியாளர்கள். உங்களை ஏமாற்ற வேண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, சீமான் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இங்கு சாதி பேசி, மதம் பேசி, பணம் கொடுத்து அரசியல் செய்ய நாம் வரவில்லை. இங்கு ஊழல், லஞ்சத்துக்கும், உண்மை, நேர்மைக்கும் தான் போட்டி. இந்த சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டும் என்று வந்திருக்கிறோம். வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கிறோம். இது நம் பெரிய கனவு. இதை செய்ய நினைக்கிறோம். பெண்களுக்கான சரிபாதி உரிமை, எல்லா சமூகத்தினரும் புறக்கணிக்கப்படாமல் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மாற்றம் வரவேண்டும் என்றால் அது நம் கையில் தான் உள்ளது. நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழி உழைக்க வேண்டும். ஒரு நாள் நாம் வெல்வோம். வரலாறு வழிகாட்டியாக இருக்கும். நமக்கு ஆலோசகர் என்று கூட யாரும் இல்லை. நான் உங்கள் உழைப்புக்கு பொருளாதாரத்தில் வலிமைப்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனித ஆற்றலை தாண்டி உழைத்திருக்கிறேன். இயன்றதை கொடுத்திருக்கிறேன். நம்பிக்கையோடு களத்தில் இருங்கள். உறுதியாக நாம் வெல்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.