டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை கொரட்டூரில் உள்ள கல்லூரியில் கொசு மருந்து அடித்த சுகாதாரத் துறை ஊழியர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு வரும் ஜனவரி மாதம் வரை இருக்கும், காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், இதை மறுத்த சுகாதாரத்துறை ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தது. இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உண்ணிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: உண்ணிக் காய்ச்சல் என்பது பாக்டீரியா கிருமியால் வரும் காய்ச்சல் ஆகும். ஆள் உயரத்துக்கு வளரும் புல், புதர்கள் மற்றும் வயல்வெளிகளில் வாழும் ஒரு வகை உண்ணி மற்றும் பூச்சி கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. முன்பு காடுகள் மற்றும் வயல்வெளிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பரவி வந்தது.
ஆனால், தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு காரணமாக அனைத்து இடங்களிலும் பரவலாக நோய் காணப்படுகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த காய்ச்சலை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மற்ற காய்ச்சலை போன்று சாதாரணமாக உடல்வலி, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே வீடியோவில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொதுநல மருத்துவர் பி.வி.பாலமுருகன் கூறுகையில், “வயல்வெளிகள், புல்வெளிகளில் நடக்கும் போது, பேன்ட், ஷூ, முழு கை சட்டை அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் போல், அதிக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வறட்டு இருமல் போன்றவை இருக்கும். குறிப்பாக, 4 மணிக்கு காய்ச்சல் இல்லாமல் இருந்தவருக்கு, 4:15 மணியளவில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு இருக்கும்.
உண்ணிக் காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம். உரிய சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும். அவ்வாறு வந்தாலும் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இணை நோயாளிகள் தாமதமாக வரும்போது உயிரிழப்பு ஏற்படும். இந்த நோய்க்கான பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்புக்கு உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு தான் காரணம். டெங்கு போன்றே காய்ச்சல், தலைவலி, வாந்தி என இருக்கும். பூச்சி கடிக்கும் இடத்தில் ஒரு தழும்பு போன்ற வடு இருக்கும். 2025-ல் 5,142 ஸ்கரப் டைபஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 4,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.