சென்னை: தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பரோலில் வந்து சவுக்கு சங்கர் பங்கேற்றார். சவுக்கு சங்கர் தாயாரின் மறைவுக்கு பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சவுக்கு மீடியா சிஇஓவும் யூடியூபருமான சங்கர் மீதான இரு மோசடி வழக்குகளில், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை போலீஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்தனர்.
அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அன்றையதினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து போலீஸார் தேடி வந்தனர்.
பின்னர் ஆந்திராவில் சவுக்கு சங்கர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக, சவுக்கு சங்கரின் தாயார் கமலா நேற்று முன்தினம் காலமானார். பெங்களூரு வில்சன் கார்டன் மின் மயானத்தில் நேற்று நடைபெற இருந்த தயாரின் இறுதிச் சடங்கில், பங்கேற்க சவுக்கு சங்கருக்கு ஏப்.13 இரவு 8 மணி முதல் ஏப்.16 இரவு 8 மணி வரை பரோல் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தாயார் கமலாவின் இறுதிச் சடங்கில் சவுக்கு சங்கர் கலந்து கொண்டார். சவுக்கு சங்கரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்துக்காக, காவல் துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம். தாயை இழந்து வாடும் சவுக்கு சங்கருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சவுக்கு சங்கரின் தாயார் மறைவு செய்திகேட்டு வருத்தம் அடைந்தேன். இந்த கடின நேரத்தில் சவுக்கு சங்கரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்கரின் தாயார் காலமான செய்தி வருத்தத்தை அளிக்கிறது. சவுக்கு சங்கருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சவுக்கு சங்கரின் தாயார் மறைந்த செய்தியறிந்து ஆழ்ந்த மனத்துயர் அடைந்தேன். சவுக்கு சங்கருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.