சென்னை: குப்பையோடு குப்பையாக கிடந்த 45 பவுன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை போலீஸார் குற்றவாளியைப் போல விசாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பத்மா(50). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணி செய்து வருகிறார். இவர் நேற்று தி.நகரில் உள்ள மகாராஜா சந்தானம் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு குப்பையோடு குப்பையாக கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்தபோது, ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் 45 பவுன் தங்க நகை இருப்பது தெரிந்தது. உடனே அதை அவரது மேற்பார்வையாளரிடம் பத்மா ஒப்படைத்தார்.
அவர் நகைகளை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சட்டம்-ஒழுங்கு போலீஸார் பத்மாவை அழைத்து அவரிடம் விசாரித்தனர்.
ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு அக்காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் பத்மா ஒப்படைக்கப்பட்டார். அவர் பத்மாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். இப்படி மதியம் 3.30 முதல் இரவு 7.30 மணிக்கு பிறகும் விசாரணை தொடர்ந்துள்ளது.
இதை அறிந்து தூய்மைப் பணி மேற்பார்வையாளர் தலைமையிலானவர்கள் திரண்டு, “குப்பையில் கிடந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பணியாளரை ஏன் இப்படி சிறை வைத்து விசாரிக்கிறீர்கள். அவர் என்ன குற்றம் செய்தார்.
கேட்பாரற்று கிடந்த நகையை போலீஸில் ஒப்படைத்தது குற்றமா? சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என சக பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில்தான் ஒப்படைக்க வேண்டும் எனக் கருதி பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.
ஆனால் போலீஸார், நகையை நேர்மையாக ஒப்படைத்த எங்களது பணியாளரை குற்றவாளிபோல் நடத்துகின்றனர்” என வருத்தத்துடன் தெரிவித்தனர். சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.45 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.