நாமக்கல்: தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் எடுப்பதால் அரசுக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மயிலாடுதுறை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கிராவல் மண் எடுக்கும் பணிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் அளவில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த முறைகேடுகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனிநபர் தலைமையேற்று பல பினாமிகள் பெயரில் மாநிலம் முழுவதும் கிராவல் மண் எடுக்கும் உரிமைகளை பெற்றுள்ளார்.
அவ்வாறு அனுமதி பெற்ற பட்டா நிலங்களோடு மட்டுமல்லாமல், அனுமதி பெறாத பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் எடுப்பது நடைபெற்று வருகிறது.
அதிகப்படியான அளவில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. குறிப்பாக அனுமதி அளிக்கப்பட்ட 40 மீட்டர் ஆழத்துக்கு மாறாக அதற்கு மீறிய ஆழத்திலும் மண் வெட்டி எடுக்கப்படுகிறது.
மேலும், போலியான அனுமதி சீட்டுகள் பயன்படுத்தப்படுவதால், உண்மையான லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சிக்கி கைது செய்யப்படுகின்றனர்.
இத்துடன், கனிமத் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தாலும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணைபுரிந்த அரசு அதிகாரிகள் மீதும் அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.