சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், இனி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
டாஸ்மாக் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி எம்ஆர்பி விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை ஒழிப்பதற்காக, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு தர வேண்டுமென கோரினர்.
இதுவரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே இருந்தது. ஆனால், இந்த முறை முதல்வர் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்து 25 சதவீத ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உதவி விற்பனையாளர்களுக்கு தற்போதைய ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் ஊதியம் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். டாஸ்மாக் ஊழியர்களின் மொத்த ஆண்டு ஊதியச் செலவு ரூ.553.72 கோடியாக உயர்கிறது. இனி டாஸ்மாக் ஊழியர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்கப்படும்.
இனி எம்ஆர்பிக்கு மேல் மதுபானம் விற்கக்கூடாது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும்.
முன்னதாக கூடுதல் தொகை வசூலித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இடைநீக்கம் செய்யப்படுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது. ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.