சென்னை: விலக்கிக் கொள்ளப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை தனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என நடிகர் எஸ்வி சேகர், காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகரும், முன்னாள் மயிலாப்பூர் எம்எல்ஏ-வுமான எஸ்.வி. சேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. அவருக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவருக்கான பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, நேற்று காவல் ஆணையரகத்துக்கு நேரில் வந்த எஸ்.வி சேகர், காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து தனக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர் கூறியதாவது: கடந்த 1992-ம் ஆண்டு முதல் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனது வீட்டின் மீது 2 முறை பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் 3 முறை கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 82 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற காவல்துறை ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
எனவே மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.