மாநகர பேருந்து மோதிய விபத்தில் பலியான பெயின்டரின் குடும்பத்துக்கு ரூ.25.81 லட்சத்தை இழப்பீடாக வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் சதீஷ்குமார், கடந்த 2022 செப்.21 அன்று தனது பைக்கில் நண்பருடன் வில்லிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, புது ஆவடி சாலையில் மாநகரப் பேருந்து மோதி படுகாயமடைந்த சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மகனின் இறப்புக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி, சதீஷ்குமாரின் தாயார் ராணி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.அருந்ததி, மாநகரப் பேருந்து ஓட்டுநரின் அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது எனக்கூறி, உயிரிழந்த சதீஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25,81,800-ஐ ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க மாநகர போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.