சென்னை: மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் பெரிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் ஆணை கடந்த நவம்பர் 22-ல் வெளியானது.
அதில், மேகேதாட்டு அணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இத்திட்டம் உச்ச நீதிமன்ற முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும். மேலும், தமிழகம் தனது வாதங்களை மத்திய நீர்வளக் குழுமத்திடம் முன்வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துகளும் முரணாக உள்ளன. எனவே, இந்த வழக்கில் தமிழகம் சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படியும், முதல்வரின் அறிவுறுத்தலின்படியும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு தற்போது மனு தாக்கல் செய்துள்ளது.
அத்துடன், மத்திய நீர்வளக் குழுமத்திடமும், மேகேதாட்டு அணை எவ்வாறு தமிழகத்துக்கு பாதகமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டு ஒரு விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகள் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா முயற்சியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.