கோப்புப்படம்
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,996 காலி இடங்களை நிரப்பும் வகையில் கடந்த அக்.12-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இறுதி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் மற்றும் ‘1: 1.25’ என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்கள் அதற்கான அழைப்புக் கடிதம் மற்றும் இதர படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவை தபால் மூலம் அனுப்பப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடம், கல்வி உளவியல், பொது அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 150 மதிப்பெண். அதேபோல, கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வில் 30 கேள்விகளுக்கு 50 மதிப்பெண். இதில் 40 சதவீத மதிப்பெண் அதாவது 50-க்கு 20 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்வர்களின் பாட விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
மொத்தம் 2.36 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தமிழ் தகுதித்தாள் தேர்வில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்ற அனைத்து பாடத்தேர்வையும் நன்றாக எழுதி, தமிழ் தகுதித்தாளில் தேர்ச்சி பெறாததால் வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களும் இதில் உள்ளனர்.