கோப்புப் படம்
சென்னை: 300 பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் பாதிக்கப்படாத வகையில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 3,300 கால்நடை உதவி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆவர்.
இந்நிலையில் மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 30 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மூலம் பணிக்கு வந்துள்ள பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியலில் கடைசியில் உள்ளனர்.
பொது கலந்தாய்வு மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் நடத்தப்பட்டால் 400-க்கும் மேற்பட்ட பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து வெவ்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் உள்ளது போல், நிலைய பணி மூப்பு அடிப்படையில் மாவட்டங்களுக்குள் முதல் நாளும், மாவட்டங்களுக்கு இடையே அடுத்த நாளும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டால் பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு 300 பெண் கால்நடை உதவி மருத்துவர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என்று பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.