தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்ட அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார் குழுத் தலைவர் ககன்தீப்சிங் பேடி. உடன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித் துறைச் செயலர் த.உதயசந்திரன், குழு உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர்.
சென்னை: தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான திட்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆய்வுக் குழுத் தலைவர் ககன்தீப்சிங் பேடி நேற்று சமர்ப்பித்தார். 2003 ஏப். 1 முதல் தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பங்களிப்புத் தொகை எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பங்களிப்பு ஓய்யூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2021 தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டதை, பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வந்தனர். இதற்கிடையில், மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
இதையடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிவற்றை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன் தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 9 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டறிந்து, கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆனால், அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டக் களத்தில் குதித்ததால், அவர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த அறிக்கையை குழுத் தலைவர் ககன்தீப்சிங் பேடி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார்.
இக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வுசெய்து, விரைவில் தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என் எதிர்பார்க்கப்படுகிறது.