சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை பூங்கா, சின்னசேலம் உட்பட 9 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் உள்ளன. இவற்றை பிரதமர் மோடி விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 119-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயிலும் 21 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
மீதமுள்ள 1,150-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் முதல் கட்ட மற்றும் 2-ம் கட்டப் பணிகள் பல்வேறு நிலைகளில் மிக வேகமாக நடைபெறுகின்றன இந்நிலையில், சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் உட்பட 8 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இவற்றை பிரதமர் மோடி விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மின்தூக்கி, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும்.
அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சென்னை பூங்கா, குன்னூர், சின்னசேலம் ஆகிய நிலையங்களிலும், கேரளாவில் தலசேரி, திரூர், பரப்பனங்காடி, அங்கமாலி, சாலக்குடி, நிலம்பூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டுப் பணிகள் இறுதி நிலையில் உள்ளன.
இவற்றில், சென்னை பூங்கா ரூ.10.68 கோடி மதிப்பிலும், குன்னூர் ரயில் நிலையம் ரூ.7.62 கோடி மதிப்பிலும், சின்னசேலம் ரயில் நிலையம் ரூ.2.5 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையங்களை பிரதமர் மோடி வரும் 12 முதல் 17-ம் தேதிக்குள் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேதி தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.