

கோப்புப் படம்
தாழம்பூர்: காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை, அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) திருடிச் சென்றதாக வெளியாகியுள்ள சம்பவம் காவல்துறையிலும், பொதுமக்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தாழம்பூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட இருசக்கர வாகனம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு பிறகு, வாகனத்தை பெற்றுக்கொள்ள வந்த உரிமையாளர் காவல் நிலையத்தில், பைக் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு, உதவி ஆய்வாளர் ராஜசேகர் காவல் நிலையத்தில் இருந்து அந்த பைக்கை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த ராஜசேகரின் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, காணாமல் போன பைக் அவரது வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, வேறு ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மற்றொரு இருசக்கர வாகனமும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில், ராஜசேகர் பணிக்கு முறையாக வராதது, இரவு நேரங்களில் சக பெண் காவலரிடம் அத்துமீறி பேசியது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் பாதுகாப்பாக இருந்த பறிமுதல் வாகனத்தை உதவி ஆய்வாளர் திருடிச் சென்றது காவல்துறையின் உள்கட்டமைப்பு பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.