சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகள், திட்டங்களிலும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைப்பதில்லை. புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைக்கும் ரூ.1,000 நிதி உதவி மாணவிகளுக்கு கிடைக்கவில்லை.
மாதிரிப்பள்ளி, டிஜிட்டல் கிளாஸ், உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகள் நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இன்னமும் இல்லை. 2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தி, இதில் 2.5 சதவீதத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரிலும் நிறை வேற்றப்படவில்லை. எனவே அரசு, அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகள், திட்டங்களிலும் இணைப்பதே, தமிழகத்தில் யாரையும் பின்தங்க விடமாட்டோம் என்ற முழக்கத்துக்கு பொருத்தமாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 328 உதவி பேராசிரியர்களை கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி.அவர்களுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கி, ஊதியத்தை உயர்த்தி பணிநிலைப்பு செய்திட வேண்டும்” என்று கூறியுள்ளார்.