தமிழகம்

சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராமதாஸ் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மேடையில் இருந்து இறங்கியதும் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம் மேற்கு தொகுதியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அணியைச் சேர்ந்த மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ,அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இரவு 7 மணி அளவில் சேலம் மேற்கு தொகுதியில் உள்ள பள்ளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

          

செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, எம்எல்ஏ.க்கள் ஜிகே மணி, , அருள் உள்ளிட்டோர் மேடையில் இருந்த நிலையில், பிரச்சார மேடையில் அமர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ், தமிழக சட்டப்பேரவையில் அதிக கேள்விகளை எழுப்பியவர் எம்எல்ஏ அருள், அவர் மீது ஏதேனும் குறை இருக்கிறதா இருந்தால் சொல்லுங்கள். புராண காலத்திலிருந்து துரோகிகள் இருக்கின்றனர். இப்போதும் துரோகிகள் இருக்கின்றனர்.

துரோகிகள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அருள் எம்எல்ஏ எதிரிகளுக்கும் அருள் புரிவார். சேலம் மேற்கு தொகுதியில் இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெறுவார். வெற்றி விழாவுக்கு நான் மீண்டும் வருவேன் என்று பேசினார்.

பின்னர் மேடையில் இருந்து இறங்கும்போது திடீரென ராமதாஸ் மயக்கம் அடைந்தார்.உடன் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றனர். பின்னர், ஐந்து ரோடு அருகே தனியார் மருத்துவமனைக்கு ராமதாஸ் அழைத்துச் செல்லப்பட்டு அஙகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்த அழுத்த குறைவு காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், தற்போது சிகிச்சைக்குப் பின்னர் நலமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேர ஓய்வுக்கு பின்னர், மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT