தமிழகம்

திமுகவா தவெகவா... குழப்பத்தில் ராமதாஸ் - தைலாபுரத்தில் இன்று ஆலோசனை

சி.கண்ணன்

அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள பாமக தலைவர் அன்புமணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தரப்புக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவி உறுதியாகியுள்ள நிலையில், எத்தனை தொகுதிகள் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற ராமதாஸ் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், அண்மையில் சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்து மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.

          

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், ராமதாஸ் அணியில் இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திமுக-வுடன் கூட்டணி வைக்கலாம் எனவும், மற்றவர்கள் விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் ராமதாஸிடம் தெரிவித்து வருகின்றனர். இதனால், கூட்டணி குறித்த முடிவை எடுக்க முடியாமல் ராமதாஸ் குழப்பத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பாமக இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது. ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT